Posted by Smt. Janaki Ramanan.
சோணாசலத்தின் சுடரொளியே சரணம். "காணாத தூர நீள் நாத வாரி" என்று தொடங்கும் திருவருணைத் திருத்தலப் பாடல். அண்ட சராசரத்திலும் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் ஆன்மாவாய் அமைந்திருப்பவன் முருகன் என்பதாலே அருணகிரிநாதருக்கு அவனை வெவ்வேறு விதமாய் உருவகப்படுத்தி உருக முடிகிறது. குழந்தையாய் மடி மீது வைத்துக் கொஞ்ச முடிகிறது. அன்னை தந்தையாய் வைத்து அடிபணிய முடிகிறது. நாயகனாய் நினைத்து ஏங்க முடிகிறது. எல்லாமே அவன், ஒவ்வொன்றிலும் அவன் என்று பார்க்கும் பக்தியின் பரிமாணங்கள் இவை. இந்தப் பாடலும் முருகனை நாயகனாய்ப் பாவித்து தன்னை நாயகியாய் வைத்து பக்தன் அருணகிரியார் பாடும் பாடல். இந்த நாயக நாயகி பாவத்தின் உச்சம் தான் வள்ளி தத்துவம் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.
காணாத தூர நீள் நாத வாரி காதார வாரம்
விளக்கம் :
தலைவன் உடன் இருக்கும் பொழுது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை Uரந்து விரிந்திருக்கும் இந்தக் கடலின் அலை ஓசை இன்ப நாதமாய் ஒலிக்கிறது. இன்றோ தலைவனைப் பிரிந்திருக்கும் இந்த நேரத்தில் அது நாராசமாய் ஒலிக்கிறது.
அதன் பினாலே காலாளும் வேளும்
ஆலால நாதர் காலால் நிலாவு முனிந்து
அந்தத் துன்ப இசையையே பின்னணியாகக் கொண்டு, தென்றல் தேரிலே வரும் மன்மதன் இன்ப நாடகம் அரங்கேற்றப் பார்ப்பது கொடுமை. அது போதாது போன்று நிலவும் அல்லவா நெருப்பை உமிழ்கிறது. அன்று தட்ச யக்ஞத்தின் போது நஞ்சுண்டவனின் அம்சமான வீரபத்திரர் தன்னைக் காலால் தேய்த்ததை எல்லாம் மறந்தோ, அல்லது அதற்குப் பழி வாங்கவோ, அந்தச் சந்திரன் இந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குவது என்ன நியாயம்!
பூ மேல் நாணான தோகை நூலாடை சோர நாடோர்கள் ஏச அழிந்து
விளக்கம்:
புவி வாழ்க்கையில் நாணத்தையே செல்வமாகப் போற்றும் இந்தத் தோகை மயிலாள் இன்று இருக்கும் நிலைதான் என்ன! தன்னை மறந்தாள். நலிந்து மெலிந்தாள். ஆடை அணிகலன்களில் கவனம் இல்லை. ஊராரும், இவள் மேல் தான் ஏதோ தவறு போல் இடித்துரைக்கத் துடிக்கின்றாள்
தானே நானாப வாத மேலாக ஆக
நாடோறும் வாடி மயங்கலாமோ
விளக்கம்: அந்த வசைச் சொற்கள் தாங்காமல் தன்னைத் தானே நொந்து கொண்ட வளாய் இவள் துடிப்பது சரியோ தலைவா? அவளைத் தேற்றுவதற்கு உடனே வா ("உன் பக்தன் உனக்காகத் தவித்துத் துயர் உறுவது உனக்குச் சம்மதமோ முருகா? அன்பனை ஆட்கொள்ள விரைந்து வருவாய் வேலவா!" என்பது உட்பொருள்)
சோணாசலேச பூணார நீடு தோள் ஆறும் ஆறும் விளங்கு நாதா
விளக்கம்: சோணாசலத்தின் சுந்தரனே, எம் ஈசனே! ஆறிரு திண்புயத்தில் அன்றலர்ந்த கடம்ப மாலைகள் அணிசெய்யக் காட்சி தரும் அலங்கார ரூபா, என் இறைவா!
தோலாத வீர வேலால் அடாத சூராளன் மாள வெகுண்ட கோவே
விளக்கம்: தோல்வி என்பதையே அறியாத வீரத்தின் திரு உருவே! சூரன் என்ற அசுரன், எவருக்கும் அடங்காமல் அடாத செய்கைகளால் நல்லோரை வாட்டியதால், சினம் மிகக் கொண்டு, உன் வேல் கொண்டு அவனை வீழ்த்தி அழித்த செவ்வேளே, எம் அரசே!
சேணாடர் லோகம் வாழ் மாதி யானை
தீராத காதல் சிறந்த மார்பா
விளக்கம்: வானோர் கோமகளாம், வெள்ளை யானை வளர்த்த தெய்வ மகளாம், தெய்வானையின் மாறாத அன்பிலே கட்டுண்டவனே!
தேவாதி கூடு மூவாதி மூவர்
தேவாதி தேவர்கள் தம்பிரானே
விளக்கம்: தேவர்களுக்கும், தேவாதி தேவர்களாம் இந்திரர்களுக்கும் , அவர்களுக்கும் தலைவர்களாம் மூவருக்கும் மேலான முழு முதற் கடவுளே, கந்தவேளே சரணம்.
Comments
Post a Comment