கரிபுராரி காமாரி - ஒரு விளக்க உரை

Posted By Mrs. Janaki Ramanan, Pune.
You can refer to the song and its meaning : karipurari

'கரிபுராரி காமாரி' என்று தொடங்கும் விராலி மலை பாடலில் – முன் பாதி தந்தையின் புகழ். பின் பாதி எந்தையாம் முருகனின் புகழ் – என்று பாடிப் பரவசம் அடைகிறாரோ அருணகிரி நாதர்! பாடலின் முன் பகுதி சிவனின் தனித்தன்மையை, தத்துவத்தை, அருமையைப் பெருமையை, வலிமையை, யோக நிலையின் சிறப்பை, ஞானத்தின் ஜொலிப்பைச் சொல்கிறது. இரண்டாம் பகுதி வேலவனின் வீரத்தை, தீரத்தை, அவதார நோக்கமாம் சூர சம்ஹாரத்தைச் சொல்லி, அவன் மறக்கருணையையும் அறக்கருணையையும் சொல்கிறது. முக்தி வாசல் திறப்பவன் முருகன் என்று உறுதி அளிக்கும் பாடல். வரிக்கு வரி, தேன் சிந்தும் சந்தத்தில் அமைந்த பாடல்.

கரி புராரி காமாரி திரிபுராரி தீயாடி
கயிலை ஆளி காபாலி கழையோனி

விளக்கம்: சிவனாரின் சிறப்புகள் சொல்லுக்குள் அடங்குவதில்லை. ஆனாலும் சொல்லாமல் இருக்க முடிவதில்லை..
– கஜமுகாசுரனை வதம் செய்து, நல்லோரைக் காத்தவர்.
– தவத்தைக் கலைத்த காமனைத் தகனம் செய்தவர்.
– திரிபுரம் எரித்துத் தீமைகளை ஒடுக்கியவர்.
– சுடலை நெருப்பின் நடுவில் ஆடி, நிலையாமை உணர்த்தி, மரண பயம் போக்குபவர்.
– கயிலை மலையின் தன்னிகரில்லாத் தலைவர்.
– மண்டை ஓட்டைக் கையில் ஏந்தி, இளமை என்றும் அழகு என்றும் நாம் உடல் மீது வைத்திருக்கும் பற்றையும், கர்வத்தையும் அடக்குபவர்.
– மூங்கிலின் அடியில் சுயம்புவாய்த் தோன்றியவர்.

கர உதாசன் ஆசாரி பரசு பாணி பானாளி
கணமோடாடி காயோகி சிவயோகி

விளக்கம் :
– தழலைக் கரத்தில் ஏந்தி இருக்கும் சம்ஹார மூர்த்தி.
– சாந்த நிலையில் மெளன உபதேசம் செய்யும் ஆசார்யன்.
– கோடரியாம் பரசு என்னும் ஆயுதம் கொண்டு வினைகளை வேரறுப்பவர்.
– இரவு போன்ற சமாதி நிலையையும் பூதகணங்களுடன் ஆடும் சலன நிலையையும் சமமாக விரும்பி ஏற்றுக் கொள்பவர்.
– யோக சாதனையின் வழிகாட்டி, யோகத்தால் உலகம் காப்பவர். சாட்சாத், சிவயோகி.

பரம யோகி மாயோகி பரி அரா ஜடா சூடி
பகரொணாத மா ஞானி பசுவேறி

விளக்கம் :
– யோக நிலையின் சிகரம் தொட்ட பரம பவித்ரமான சிறந்த யோகி
– யோக சாதனையின் உச்சத்தை தொட்டவர்
– பாம்பு போல் சுருண்டிருக்கும் குண்டலினி சக்தியை பிரமரந்திரம் என்னும் சிரசின் உச்சி வரை ஏற்றுவது என்பதை உணர்த்த ஜடாமுடி யில் பெரிய நாகத்தை அணிந்திருப்பவர்
– எவராலும் எடுத்துச் சொல்ல முடியாத ஞானப் பிழம்பாய் ஜொலிப்பவர்
– ஞான ஸ்வரூபமான நந்தியை வாகனமாய்க் கொண்டவர்.

பரதமாடி கானாடி பர வயோதிகா தீத
பரம ஞான ஊர் பூத அருளாயோ

விளக்கம் :
– மன்றத்தில் ஆனந்த தாண்டவம் ஆடி,
– காட்டில் கோர தாண்டவம் ஆடி, பல வகையான ப்ரபஞ்சத்தின் இயக்கங்களுக்கு அதிர்வுகளுக்கு ஆதாரமாயிருப்பவர்
– மேன்மையானவர்,
– மூப்பு என்று ஒன்று இல்லாமல் காலத்தைக் கடந்து நிற்பவர்
அத்தகைய ஞானாக்னியின் தெளிந்த ஞானத்தை இந்த எளியேன் பெற்று சிவானந்தம் அடைய நீ தான் அருள வேண்டும் முருகையா. முக்தி வாசல் திறக்கும் முழுமையே, நீயே கதி.

சுருதியாடி, தாதாவி வெருவி ஓட மூதேவி
துரக கோப மீதோடி

விளக்கம் :
முருகையா,எந்த நோக்கத்துக்காக நீ அவதாரம் செய்தாயோ அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் ஆணவத்துடன் ஆட்டம் போட்ட சூரபன்மன் மேல் அடங்காச் சினம் கொண்டு நீ போர்க்களம் புகுந்த பொழுது, படைப்புக் கடவுளே கூடப் பதறி ஓடினான். சௌபாக்கியங்களுக்குச் சத்துருவான மூதேவி, உன் முன் வரவும் முடியாமல் அஞ்சி ஓடி மறைந்தாள். உன் சினத்தை உள் வாங்கிக் கொண்டு புரவி போல் பறந்த மயில் மீது ஆரோகணித்து உன் தாக்குதலைத் தொடங்கிய பொழுது

வட மேரு சுழல வேலை தீ மூள அழுதளாவி வாய் பாறி

விளக்கம் :
இயற்கையே நடு நடுங்கியது. மேரு மலை சுழன்றது. கடல் தீப்பற்றி எரிந்தது. சூரன் அலறித் துடித்து விழுந்து அழிந்தான்.

உலகேழும் திகிரி மாதி ராவார
திகிரி சாய வேதாள
திரளி னோடு பாறோடு கழுகாட

விளக்கம் :
ஒரு சக்கரம் போல் ஏழு உலகையும் வளைத்துத் திசைகளை மறைக்கும் சக்கர வாளக் கிரி சரிந்து விழ, பேய்க் கணங்கள் ஆட, பருந்துகளும். கழுகுகளும் உணவு கிடைத்த உற்சாகத்தில் கூட்டம் கூட்டமாய்ப் பறந்து திரிய

செருவினாடு வானீப கருணை மேருவே பார
திருவிராலியூர் மேவு பெருமாளே

விளக்கம் :
நீசர்களை அழிக்க நீயே விரும்பிப் புனைந்து கொண்ட போர்க் கோலம் அல்லவா அது ! அதுவும் கூட உன் மறக்கருணையின் வெளிப்பாடல்லவா ! புகழ் கொண்ட விராலி மலையில், கருணையின் சிகரமாய் உயர்ந்து நின்று அருள் மழை புரியும் முருகா சரணம்.

கழை யோனி - ஒரு குறிப்பு

கழை யோனி என்றால் மூங்கிலிற் பிறந்தவர் என பொருள். அரசமரம், துளசி இவைகளை போலவே மூங்கில் மரம் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. சுவாமியை வழிபடுவதற்காக, வேதங்கள் மூங்கில் வடிவில் இருப்பதாக சொல்வதுண்டு. சிவன் கோவில்களில் வில்வம், வன்னி, கொன்றை போன்ற மரங்கள் தலவிருட்சமாக இருக்கும். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், திருவள்ளூர் அருகிலுள்ள திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில், நவக்கிரக கேது தலமான நாகப்பட்டினம் மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவில்களில் மூங்கில் தலவிருட்சமாக இருக்கிறது. இத்தலங்களின் புராணங்களில் சிவபிரான் மூங்கிலடியில் தோன்றினதாக குறிப்பிடப்படுகிறது.

திருப்பாசூர் தல வரலாறு: வேதங்களைத் திருடிச்சென்ற மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்ததால் உண்டான தோஷம் நீங்க, மகாவிஷ்ணு இத்தலத்தில் சிவபூஜை செய்தார். அவருக்கு அருள் செய்த சிவன் இங்கேயே லிங்க வடிவில் எழுந்தருளினார். மூங்கில் வனமாக இருந்த இப்பகுதியில் லிங்கத்திற்கு மேலே புற்று வளர்ந்து மூடியது. அந்தப் புற்றின் மீது மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று தினந்தோறும் பால் சுரந்தது. ஒருமுறை கரிகாலச் சோழமன்னன் கரிகாலன் இந்த வழியாக மூங்கில் காட்டில் சென்று கொண்டு இருக்கும்போது மூங்கிற்புதரில் சிவலிங்கம் இருக்கக் கண்டு இவ்வாலயம் சிவபெருமானுக்கு எழுப்பினான் என்று தல வரலாறு கூறுகிறது. மூங்கில் வனத்தில் தோன்றியதால் சிவனுக்கு "பாசூர் நாதர்" என்ற பெயர் ஏற்பட்டது. பாசூர் என்றால் மூங்கில். மூங்கில் காட்டில் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் ஆலயம் உள்ளதால் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே