அபகார நிந்தை : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song abakaara ninthai (அபகார நிந்தை) in English, click the underlined hyperlink.

அபகார நிந்தைப் பட்டுழலாதே

சுவரில் எறிந்த பந்து போல் செய்த பாவம் தண்டனையாக, பழியாகத் திரும்பி வந்து தாக்கும் என்பதை இயற்கை நியதியாக வகுத்து வைத்தவனே! மனதாலும், வாக்காலும், செயலாலும் மற்றவரை வருத்தும் அபகாரம் நான் செய்துவிடாமல், பாவத்தின் நிழல் என்னைத் தீண்டி விடாமல், பழிச் சொல் ஏதும் அண்டி விடாமல் காத்து நிற்பாய் கந்தா.

அறியாத வஞ்சரைக் குறியாதே

விளக்கம் : பாவம் செய்யத் தூண்டுகின்ற கீழான மனிதருடன் நான் சேர்ந்து விடாமல், தற்காத்துக் கொள்ளும் பக்குவம் தருவாய். அவர்கள் அறியாதவர்கள் என்பதை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் பாதையிலிருந்து விலகும் பண்பை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உபதேச மந்திரப் பொருளாலே
உனை நான் நினைந்தருள் பெறுவேனோ

விளக்கம் : அன்று, அருணையில் என்னைக் காத்து ஞான மார்க்கம் காட்டிவிட்டாய். அந்த ஞானம் மெய்ஞானமாய் கனிந்து என்னைக் கடைத்தேற்ற, குருவாக நீயே வந்து உபதேசம் செய்து விடு, பரமகுருநாதா! மூல மந்திரம் தந்துவிடு. அதைக்கணமும் நான் மறவாமல் ஜபிக்கும் தகுதியை நான் பெற உன் அருள் ஒன்றையே நாடுகிறேன் ஷண்முகா!

இபமா முகன் தனக்கிளையோனே
இமவான் மடந்தை உத்தமி பாலா

விளக்கம் : அன்று வயலூரில் பொய்யாகணபதியாய் வந்து பொன்னுபதேசம் செய்த கணநாதனின் இளைய சகோதரா! ஞானமயமான உமையாளின் செல்வக் குமரா! உன்னைவிட்டால், ஜப தவம் என்ற ஞானவழியில் என்னை நடத்துவார் யார்!

ஜபமாலை தந்த சற்குருநாதா
திருவாவினன்குடிப் பெருமாளே

விளக்கம் : அருணையில் வாழ்வை மீட்டுத் தந்து, வயலூரிலும் விராலி மலையிலும், திருப்புகழ் பாட வைத்து, இன்று திருவாவினன் குடியில் எனக்கு ஜபமாலையும் தந்துவிட்ட ஞான குருவே! உன் அருள் வெள்ளத்தில் திக்குமுக்காடும் ஏழை உன் பாதமலர் பணிந்து பாடுவதையே பணியாய்க் கொண்டு விட்டேன்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே