Posts

Showing posts from June, 2018

கறுத்த தலை - J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation for the song karuththa thalai by clicking the underlined hyperlink. வேங்கட மலையில் உறை வேலவா சரணம். திருப்புகழ் பாடல்களுக்கு ஆங்காங்கே புராணங்களைக் கொண்டு வநது சேர்த்துத் பொருட் செறிவும் மெருகும் ஊட்டுகிறார் அருணகிரிநாதர். "கறுத்த தலை" என்ற திருவேங்கடம் பாடலில் கந்தபுராணத்தின் அடிச்சுவட்டில் நடக்கிறார். மத நல்லிணக்கம் என்ற நோக்கமும் இதில் நிறைவேறுகிறது. மலர்க்கமல வடிவுள செங்கை அயிற் குமர குகை வழி வந்த மலைச் சிகர வடமலை நின்ற பெருமாளே அதாவது, சிவந்த தாமரைக் கரத்தில் வேல் தாங்கி ஒரு குகை வழியே வேங்கட மலை வந்து சேர்ந்த பெருமானே என்கிறார். சுவாமிகள் திருப்பதிக்குச் சென்ற காலத்தில் வடவேங்கடத்தில் முருகர் ஆலயத்துடன் திருமால் ஆலயமும் இருந்தது. ஒரு காலத்தில் முருகபிரான் உமையம்மையாருடன் பிணங்கி பாதாள வழியே வந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கடத்துக்கு வந்த சரிதத்தைத் இந்த அடிகளில் குறித்துள்ளார்.

அந்தோ மனமே — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune For a comple translation/explanation of the song ' anthO manamE ' in English, please click the underlined hyperlink. சீரான சிராப்பள்ளியில் கோயில் கொண்டிருக்கும் குமரா சரணம். "அந்தோ மனமே" என்று தொடங்கும் திருச்சிராப்பள்ளிப் பாடலில் "சிராப்பள்ளி் என்பார் மனமேதினி நோக்கிய பெருமாளே," என்கிறார் அருணகிரியார். அதாவது, திருச்சிராப்பள்ளி, திருச்சிராப்பள்ளி, என்று திரும்பத் திரும்பச் சொல்வோரின் உள்ளத்தையே தன் கோயிலாகக் கொண்டு விடுகிறானாம் முருகன்! எத்துணை தலப் பெருமை! "திருச்சிராப்பள்ளி என்னலும் தீவினை நரிச்சிராது நடக்கும் நடக்குமே" என்கிறார் அப்பர் பெருமானும். அதாவது, சிராப்பள்ளி என்று சொன்னதும் தீவினை ஓடி விடுமாம். அத்தகைய சீரும் பேரும் பெற்ற திருத்தலப் பாடலில், அலை பாயும் மனதை நிலைப்படுத்த வழிகள் சொல்கிறார் அருணகிரிநாதர்.

நினது திருவடி — J.R. கருத்துரை

By Smt. Janaki Ramanan For a complete translation/explanation of the song ninathu thiruvadi , please click the underlined hyperlink. அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது காப்பாற்றி, 'முத்தைத்தரு' என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான், அவரை 'வயலூருக்கு வா!' என்று பணித்தார். மகிழ்ச்சி அடைந்த அருணகிரியார் இத்தலத்திற்கு வருகை புரிந்தார். அங்கு முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ? என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர், பொய்யா கணபதி தோன்றி, சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தரும்படி அருளினார். அருணகிரிநாதருக்காக முருகன் தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய அருணகிரி நாதருடைய நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னர் அவர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார். இன்ப மயமான இளங்குமரனைப் பாடும் சந்தமயமான "நினது திருவடி" என்னும் திருப்புகழின் ஊற்றுக் கண் திறக்கிறது.

சிரமங்க அங்கை — JR கருத்துரை

By Smt. Janaki Ramanan, Pune For a detailed exposition of the thiruppugazh song, click: siramanga mangai வள்ளிமலையின் வாழ்வே சரணம். முருகனின் தண் கழல் பட்டுப் Uட்டுக் குளிர்ந்த , சிறந்த, அழகினை அள்ளிச் சொரிகின்ற வள்ளிமலை. அதைத் தன் தமிழால், பக்தியால் நனைக்கின்றார் அருணகிரி நாதர். "சிரம் அங்கம் அங்கை" என்று தொடங்கும் பாடல்.

ககனமும் அனிலமும் — J.R. கருத்துரை

By Smt Janaki Ramanan, Pune. You may read the detailed explanation of the song gaganamum anilamum in English by clicking the underled hypelink. வள்ளிக்கு வாய்த்த பெருமாளே சரணம். " ககனமும் அனிலமும் " என்று தொடங்கும் பாடலில் வளமான வள்ளிமலையை சுகமான தமிழால் வர்ணித்து விழி முன்னே காட்டுகிறார் அருணகிரி நாதர். வகுளமும் முகுளித வழைகளும் மலிபுன வள்ளிக் குலாத்தி கிரி அதாவது, பூத்துக் குலுங்கி மகிழ்ச்சி தரும் மகிழ மரங்களும், அரும்பு கட்டிச் சரம் சரமாய்த் தொங்கும் சுர புன்னை மரங்களும், பயிர் முற்றிச் செழித்த தினைப் புனங்களும், அடர்ந்து படர்ந்த வள்ளிக் கொடிகளும் நிறைந்த வள்ளி மலை என்ற அழகான வர்ணனை. வள்ளி மணவாளனை வரவேற்க இயற்கை எடுத்த எழிற் கோலமோ அது? வனசரர் மரபினில் வருமொரு மரகத வள்ளிக்கு வாய்த்த பெருமாளே

தேனுந்து முக்கனி — J.R. எண்ண அலைகள்

By Smt Janaki Ramanan, Pune. For a full paraphrase and explanation of the song thenunthu mukkanigal , click the underlined hyperlink. குன்று தோறும் ஆடும் குமரா சரணம். முதலில் ஜோதி மயமாய் சோணாசலத்திலும், பின் அருள் மயமாய் வயலூரிம், அதன் பின் அன்பு மயமாய் விராலிமலையிலும் அருணகிரிநாதரை ஆட்கொண்டான் அந்த சுந்தரக் கந்தன். அவருள்ளே ஞானத்தின் பொறி கனிந்து கொண்டே வந்தது. யோக நிலைகள் புரிபட்டன. யோக சாதனைகள் கை கூடின. தமிழ்த் தாயும் அமுதென அருள் பொழிந்தாள். அவரை ஸ்தலம் ஸ்தலமாய் அழைத்து தேனுந்து முக்கனிகளின் சாற்றினை விஞ்சும் சிவஞானப் பேற்றினை ஊட்டினாள். தூய பக்தி நிலைக்கு மாற்றினாள். வனத்து மங்கையும், வானத்து மங்கையும் தன்னுடன் இணைந்திருக்க, சக்தி நிலைகள் காட்டினாள். பரதத்துவம் புரிந்து விட்டதாலே, அகத்திலும் புறத்திலும் சரவணபவனே நிறைந்து விட்டதாலே மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை என்ற அகத்தின் ஆறு ஆதார ஸ்தானங்களையே புறத்தில் அறுபடை வீடுகளாய்க் கண்டு அருணகிரியார் பாடிய திருப்புகழ் என்னும் தேனமுதம் கிடைத்தது. வேதாந்த சாரத்தைப் பிழிந்து, அதில் சந்தமெனும் அ

எழுகு நிறை நாபி — J.R. விளக்கவுரை

By Smt. Janaki Ramanan, Pune You may read the explanation in English for the song ezhugu nirai naabhi by clicking the underlined hyperlink வேதாசலமாம் திருக்கழுக் குன்றத்தின் திருமுருகா சரணம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு விளையும் சங்கு தீர்த்தம் உள்ள சிறந்த தலம் திருக்கழுக்குன்றம். வேதபுரீஸ்வரரும், பெண்ணின் நல்லாள் அம்மையும் கோயில் கொண்டிருக்க, வேதங்களும், கழுகுகளும் வழிபாடு செய்யும் தெய்வீகத் தலம். பட்சி தரிசனத்திற்காக இன்றும் மக்கள் கூடும் புனிதத் தலம். "எழுகு நிறை நாபி" என்ற திருக்கழுக்குன்றப் பாடலில், வேண்டுகோள் எதுவுமே வைக்காமல், குறையில்லா நிறைகுடமாய் நின்று முருகனின் துதி பாடுகிறார் அருணகிரிநாத ஸ்வாமிகள். அவன் அருமை பெருமைகள் மட்டுமே சொல்லப்படும் அழகிய பாடல். இது பக்தியின் உச்சம். பரமானந்த வெள்ளம்.

வேத வெற்பிலே — விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune. You may read the meaning of the song vEtha verpile in English by clicking the underlined hyperlink. வேத வெற்பின் வேலவா சரணம். "வேத வெற்பிலே " என்று தொடங்கும் திருக்கழுக்குன்றம் பாடல் தெய்வீக மணம் நிரம்பி உள்ளதாக இருக்கிறது. வேத வெற்பிலே புனத்தில் மேவி நிற்கும் அபிராம "வேதாசலமாக உயர்ந்து நிற்கும் திருக்கழுக்குன்றத்தையும், தினைப் புனத்தையும் விரும்பி வந்து, நிலைத்து நின்ற பேரழகா" என முருகனைத் துதிக்கிறார் அருணகிரிநாதர். ஏன் வேத வெற்பை விரும்பி வந்தான் வேலவன்? பெயரிலேயே தன் சிறப்பைச் சொல்லி நிற்கும் குன்றம் அது. வேதங்களே மலையாக உயர்ந்து நிற்பதால் அது வேத வெற்பு. அதன் சிகரத்தில் தேவர்கள் கூடி வேத கோஷங்கள் எழுப்பிக் கொண்டிருப்பதால் அது வேத வெற்பு. வேத புரீஸ்வரரின் அருள் நிறைந்து இருப்பதால் வேத வெற்பு. "கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே " என்று உருகுகிறார் மாணிக்கவாசகர். தவசிகள் இருவர் இன்றும் கழுகுகள் ௹பத்தில் தரிசனம் தரும் வேத வெற்பு. அதனால் அங்கே விருப்பத்துடன் வந்து நிற்கிறானாம் வேலவன்.

ஐயும் உறு நோயும் — ஒரு விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune. Please click the following underlined link for a word-by-word explanation of the song aiyumuru noyum in English. வள்ளி மணவாளா சரணம். அருணகிரியாருக்கு ஆயிரமாயிரம் ஆன்மீக அர்த்தங்கள் உணர்த்திய மலை வள்ளிமலை. வள்ளி தத்துவம் என்ற பரமாத்ம-ஜீவாத்ம ஐக்கியத்தைத் தெளிவாக்கிய மலையும் வள்ளிமலையே. நோய், மோகம், மற்றும் தாபம் என்னும் இருட் கடலில் மூச்சுத் திணறும் பொழுது, ஐயன் முருகன் வாழும் வள்ளிமலைக் காற்றே உயிர் மூச்சாகி உய்விக்கும் என உணர்ந்து உணர்த்துகிறார் அருணகிரிநாதர். இதோ அந்த வள்ளிமலை பாடல்.

கீத விநோத -- J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune. For a paraphrasing of this song in English, click geetha vinOtha முன்னுரை மனிதனின் ஐம்பொறிகளுக்கும் மூவாசைகளுக்கும் நடக்கும் கயிற்று இழுப்புப் போட்டியில் பொறிகள் கலங்கித் துவண்டு தோல்வியுறுவது வாடிக்கையாகி விடுகிறது. அதிலும் பெண்ணாசை, அதர்மச் செயல்கள் அத்தனையையும் செய்யத் தூண்டி, பேரழிவில் கொண்டு சேர்க்கிறது. மீட்சிப் பாதையில் நடக்க ஆரம்பித்த பின்னரும், பெண்ணாசை இன்னும் மிச்சம் இருக்குமோ என்று அச்சம் கொண்டு, அறுமுகவனை அழைக்கிறார் அருணகிரிநாதர். சரவணனிடம் சரணாகதி செய்து விட்டாலோ அந்தப் பெண்ணாசையே மண்ணோடு மண்ணாகும் விந்தை நடந்து விடுகிறது என்று விளக்கேற்றும் பாடல்.

195. இலாபமில் By Janaki Ramanan

The song ilabbamil is explained in English here : 195.Ilabamil The explanation in Tamil has been posted by Smt Janaki Ramanan, Pune . விராலிமலையில் தான் அருணகிரிநாதருக்கு எத்தனை, எத்தனை இனிய ஆன்மீக அனுபவங்கள்! சிவ அம்சங்கள் அத்தனையும் உள்ளடக்கி, சிவ ஸ்வரூபனாகவே தரிசனம் தந்து விளையாடுகிறான் வேலவன். சிவ பாலனாகவும் காட்சி தருகிறான். எந்த ரூபத்தில் வந்தாலும் ஆட்கொள்ளும் பரம்பொருள் அவன் தான் எனச் சரவணனைச் சரண் அடைகிறார் அருணகிரியார். முதல் பகுதி காட்டுவது, சிவன் அம்சமும், முருகன் அம்சமும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும் , "சத்" எனும் சத்திய தரிசனமோ! இரண்டாம் பகுதி, மங்கல ஸ்வரூபனாக, சிவபாலனாகக் காட்சி தரும் "சித் " எனும் ஞானமோ! மூன்றாம் பகுதி முருகனை ஆனந்த மயமாகக் காணும் நிலையோ! மொத்தத்தில் அவன் சச்சிதானந்தனே தானோ, என எண்ண வைக்கும் ஆன்மீக விளக்கு. விளக்கவுரை இலாபமில் பொலாவுரை சொலா மன தபோதனர் இயாவரும் இராவு பகல் அடியேனை விளக்கம் விராலிமலைக்கு என்னை ஈர்த்து வந்த காந்தமே கந்தா ! எப்படி எப்படியோ இருந்த என்னை முற்றிலும் புதியவன் ஆக்கி விடு. பொய்மையோ, வீண் வ

கரிபுராரி காமாரி - ஒரு விளக்க உரை

Posted By Mrs. Janaki Ramanan, Pune. You can refer to the song and its meaning : karipurari 'கரிபுராரி காமாரி' என்று தொடங்கும் விராலி மலை பாடலில் – முன் பாதி தந்தையின் புகழ். பின் பாதி எந்தையாம் முருகனின் புகழ் – என்று பாடிப் பரவசம் அடைகிறாரோ அருணகிரி நாதர்! பாடலின் முன் பகுதி சிவனின் தனித்தன்மையை, தத்துவத்தை, அருமையைப் பெருமையை, வலிமையை, யோக நிலையின் சிறப்பை, ஞானத்தின் ஜொலிப்பைச் சொல்கிறது. இரண்டாம் பகுதி வேலவனின் வீரத்தை, தீரத்தை, அவதார நோக்கமாம் சூர சம்ஹாரத்தைச் சொல்லி, அவன் மறக்கருணையையும் அறக்கருணையையும் சொல்கிறது. முக்தி வாசல் திறப்பவன் முருகன் என்று உறுதி அளிக்கும் பாடல். வரிக்கு வரி, தேன் சிந்தும் சந்தத்தில் அமைந்த பாடல்.