கீத விநோத -- J.R. விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune.

For a paraphrasing of this song in English, click geetha vinOtha

முன்னுரை

மனிதனின் ஐம்பொறிகளுக்கும் மூவாசைகளுக்கும் நடக்கும் கயிற்று இழுப்புப் போட்டியில் பொறிகள் கலங்கித் துவண்டு தோல்வியுறுவது வாடிக்கையாகி விடுகிறது. அதிலும் பெண்ணாசை, அதர்மச் செயல்கள் அத்தனையையும் செய்யத் தூண்டி, பேரழிவில் கொண்டு சேர்க்கிறது. மீட்சிப் பாதையில் நடக்க ஆரம்பித்த பின்னரும், பெண்ணாசை இன்னும் மிச்சம் இருக்குமோ என்று அச்சம் கொண்டு, அறுமுகவனை அழைக்கிறார் அருணகிரிநாதர். சரவணனிடம் சரணாகதி செய்து விட்டாலோ அந்தப் பெண்ணாசையே மண்ணோடு மண்ணாகும் விந்தை நடந்து விடுகிறது என்று விளக்கேற்றும் பாடல்.

கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே

விளக்கம் கலைகளில் நான் கொண்ட ஆர்வம், மன்மதக் கலையில் கொண்டு தள்ளி விடும் என்று உணராமல் போனேனே முருகா. அந்த வஞ்சக விலைமாதர் குரலிலேயே ராக விநோதங்கள் குழைந்து வருவதாக எண்ணி மயங்கினேன். பக்தி இல்லாத கீதம் கவைக்கு உதவாது என்று தெரியாமல் போனது. ஆறுமுகா, உன் அலங்கார முடித் திரளின் அழகை, ஒளியை, காண்பதற்குப் பதிலாக அந்த இழிந்த வனிதையரின் வாரி முடித்த கருங்கூந்தலுக்கு விலை போன கொடுமையும் நடந்தது.

நீதியிலா தழித்தும் உழலாதே
நீ மயிலேறி யுற்று வரவேணும்

விளக்கம்: ஆசையின் வசப்பட்டு அதர்மத்துக்கும், அக்கிரமத்துக்கும் துணை போனக் கசந்த கால கட்டங்களை நினைவால் கூட அசை போட்டு விடாமல், அவை என்னைத் திரும்பிப் பார்த்து விடாமல் தடுத்தாட்கொள்வாய், தயாளா! அழிவுப் பாதையின் சரிவுக்கு அஞ்சுகிறேன். மனம் கனிந்து மயிலேறி விரைந்து வந்து, ஏழை வீணாகி விடாமல், வீழ்ந்து படாமல் காப்பாய்.

சூதமர் சூரருட்க பொரு சூரா
சோணகிரீயிலுற்ற குமரேசா

விளக்கம்: என்னைக் காத்துக் கொள்ளும் வலிமை எனக்கில்லை. என் வினையும் அதற்கு விடப் போவதில்லை. வஞ்சம் நிறைந்த சூரர் நெஞ்சம் நடுங்க அவர்களைப் பந்தாடி அழித்த வீரத் திலகமே, வடிவேலா, வழித் துணையே, அன்று சோணாசலத்தில் காட்சி தந்த விழிச்சுடரே, இன்று மீட்சிக்கு வந்து விடு!

ஆதியர் காதொருச் சொல் அருள்வோனே
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே

விளக்கம்: ஆதி தேவனான பரமேஸ்வரனுக்கே ப்ரணவப் பொருள் சொன்ன ஞானப்ரவாகமே, அந்த ஞானத்தின் ஒரு துளி என் மேல் பட்டால் கடைத் தேறி விட மாட்டேனா! மானுடர் கஷ்டங்கள் போக்க இஷ்டமுடன் வரும் கணநாயகனுக்குத் துணையாய் இணையாய் உதித்த இளையவனே, இளங் குமரா! சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே