தமரும் அமரும் : J R விளக்கவுரை

By Smt Janaki Ramanan, Pune

To read the meaning of the song thamarum amarum (தமரும் அமரும்) in English, click the underlined hyperlink.

முன்னுரை

கழைக் கூத்தாடிகள் ஒரு ஆதாரத்தை விட்டு விட்டு, கண் இமைப்பதத்குள் இன்னொரு ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு சாகசம் காட்டுவார்கள். வாழ்விலோ, நாம் ஒவ்வொரு முறையும் ஆதாரம் என்று பற்றிப் பிடித்துக் கொண்டு ஆசுவாசப்படும் மனைவி, மக்கள், உற்றம், சுற்றம் என்பதெல்லாம் தாமே கழன்று கொள்ளும் பரிதாப நிலை வந்தால் என்ன செய்வோம்! சாஸ்வதம் சரவணன் திருவடிகள் தான் என உணர்த்துகிறார் அருணகிரிநாதர். மரண பயம் போக்கும் மநதிரம் சொல்கிறார். திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம், மயங்கிக் கிடக்கும் மனித குலத்துக்காகத்தான்.

தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் அயலாக

விளக்கம் : உற்றம் சுற்றம் என்ற உறவுப் பாலங்கள், மனைவி மக்கள் என்ற இனிய இல்வாழ்க்கை, இந்த நாட்டின் குடிமகன் என்ற நிம்மதி, என்ற கட்டுக் கோப்பான அமைப்புக்களுக்குள் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாள் இவை எல்லாம் எனனை விட்டு விலகலாம். என் நினைவே நழுவி, நான் தனிமைப் பட்டு, ஒரு அன்னியனாகும் நிலையும் வரலாம்.

தறுகண் மறவி முறுகு கயிறு
தலையை வளைய எதியாதே

விளக்கம் : இழுத்துக் கட்டிய பாசவலைகள் இல்லாமல் போக, கொடுமையான யமனின் பாசக்கயிறு மட்டும் தலையைச் சுற்றி வலுவாய் இழுக்கும் வேதனையை நான் அனுபவிப்பதற்குள் அருகே வந்து விடு முத்தையா.

கமல விமல மரகத மணி கனக மருவும் இருபாதம்

விளக்கம் : மிகவும் பரிசுத்தமானதாய், மரகதம் போல் ஜொலிப்பதாய், தங்கம் போல் தகதகப்பதாய், எழில் பொங்கும் உன் தாமரைப் பாதங்களை எனக்குக் காட்டி விடு முருகா.

கருத அருளி எனது தனிமை கழிய அறிவு தர வேணும்

விளக்கம் : இந்த ஏழைக்கு இரங்க நினைத்து அருள் சுரந்து விடு. அந்தக் கணமே என் தனிமை உணர்வெல்லாம் அடிபட்டுப் போய் விடாதா! அந்த ஞானம் என்னுளே ஒளிசிந்த வைத்து விடு.

குமர சமர முருகா பரம
குலவு பழனி மலையோனே

எப்போதும் இளமையான எழிலே! தீயதை அழிக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அருளே! முதன்மையாம் மெய்ப்பொருளே! மானுடருக்காக வனப்பான பழனிமலையில் வந்து கோயில் கொண்டிருக்கும் கருணையே!

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி மணவாளா

விளக்கம்: மதம் கொண்ட யானையாகச் சீற்றத்துடன் வருவது போல் வந்து, குற வஞ்சியை அச்சுறுத்தி உன்னிடம் ஓடி வந்து சேர வைத்தான் உன் ஜேஷ்டன். அந்த இன்ப மகளை அன்புடன் மணந்து கொண்டவனே!

அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர் செய் தருள்வோனே

விளக்கம் : அசுரர்கள் ஆணவத்தையும், உடல்களையும் அழித்து முடித்த அந்தக் கணமே, தேவர்களின் துயரனைத்தும் துடைத்து விட்ட தலைவா, அருளாளா !

அறமும். நிறமும் மயிலும் அயிலும் அழகும் உடைய பெருமாளே

விளக்கம் : உன் கருணை ஒரு பேரழகு, உன் செம்மை ஒரு வனப்பு, நீ காட்டும் அறவழிகள் அழகு, வனப்பான மயில் அழகு, நீ இணை பிரியாமல் தாங்கி இருக்கும் வேல் உன் அழகான அணிகலன், எம் உள்ளத்திற்கு அழகே, அழகனே! சரணம், சரணம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே