வந்து வந்து முன் தவழ்ந்து : J R. விளக்கவுரை

By Janaki Ramanan, Pune.

For a complete paraphrase of the song, with its meaning in English, click the underlined hyperlink : வந்து வந்து முன் தவழ்ந்து

முன்னுரை

"வந்து வந்து முன் தவழ்ந்து" என்று தொடங்கும் திருச்செந்தூர் திருத்தலப் பாடல். சாஸ்வதம் என நம்பி உலகப் பற்றுக்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறோம். அழகிய குழந்தை, அன்பான மனைவி, மாடமாளிகை, பரிவோடு கூடிநின்று அரண் அமைக்கும் சொந்த பந்தம், என்று வண்ணமயமாய் நிறைந்திருக்கும் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவற்றையெல்லாம் மறக்கும் அளவுக்கு நினைவாற்றல் இழப்பதற்கு முன் முருகன் கழல் பற்றத் தவிக்கும் அருணகிரியார், அந்தத் தவிப்பை நமக்குள்ளும் செலுத்தும் பாடல். ஒருநாள் இந்த உலக நினைவுகள் மங்கி மறந்து போகலாம், அந்த சுந்தரக் கந்தனையும் நினைக்காமல் விட்டுவிட்டால் அந்தரத்தில் அல்லவா ஊசலாட நேரிடும் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.

வந்து வந்து முன் தவழ்ந்து
வெஞ் சுகம் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி அழுங்குழநதையோடு

விளக்கம் : என் முன்னே வந்து தவழ்ந்து, தவழ்ந்து, உள்ளம் கொள்ளை கொள்வதும், பாலுக்காக அழும் அழுகையில் கூட இசையின்பம் தருவதுமாய் கணத்துக்குக் கணம் இன்பத்தை வாரி வழங்கும் குழந்தையும்

மண்டலம் குலுங்க அண்டர்
விண்டலம் பிளந்தெழுந்த
செம்பொன் மண்டபங்களும்பயின்ற வீடு

விளக்கம் : விண் முட்டும் அளவுக்கு உயரமாய் விசாலமாய் பொன் போல் மின்னுவதாய் பொருளைக் கொட்டிக் கட்டி முடித்து கர்வத்துடன் குடியிருக்கும் வீடும்

கொந்தளைந்த குந்தளம்
தழைந்து குங்குமம் தயங்கு
கொங்கை வஞ்சி தஞ்சமென்றுமங்கு காலம்

விளக்கம் : குங்குமத்தின் மங்கலத்துடன், பூச்சூடிய பூங்கொடியாய் இருக்கும் அழகிய அன்பான மனைவியும் தான் வாழ்க்கைக்கு அர்த்தம் என்றும், ஆதாரம் என்றும், நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஐயா அவற்றையெல்லாம் மறக்கும் விதத்தில் நினைவாற்றல் இழந்து, அறிவும் மங்கும் அவல நிலை வருவதற்கு முன்னால்

கொங்கடம்பு கொங்கு பொங்கு
பைங்டம்பு தண்டை கொஞ்சு
செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய்

விளக்கம் : கொங்கு, அடம்பு, கடம்பு போன்ற வனப்பான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாசம் வீசுகின்ற, தண்டையும் சதங்கையும் கொஞ்சுகின்ற, உன் தாமரைப் பாதங்களில் அடைக்கலம் தருவாய் முருகையா!

சந்தடர்ந்து எழுந்தரும்பு
மந்தரம் செழுங் கரும்பு
கந்தரம்பை செண்பதங் கொள்செந்தில் வாழ்வே

விளக்கம் : செங்கரும்பும், குலை தள்ளிய வாழையும், சந்தன மரமும், அடர்ந்த மந்தாரமும் விண் தொடும் அளவுக்கு செழித்து வளர்ந்து வளம் சேர்க்கும் செந்தூரின் நாயகனே!

தண் கடங் கடந்து சென்று
பண்கடங் கடர்ந்த இன்சொல்
திண்புனம் புகுந்து கண்டுஇறைஞ்சு கோவே

விளக்கம் : அடர்ந்த வனப் பகுதிகளைக் கடந்து வந்து, வித விதமான இசைத் தேன் போல் இன்சொல் மிழற்றும், வள்ளியைத் தேடி வந்து காத்தருள் என்று அவள் அன்புக்காக இறைஞ்சிய என் தலைவா ! (சம்சாரம் என்னும் வனத்தில் தவித்திருக்கும் பக்தனைத் தேடி வந்து ஆட்கொள்ளும் பரமனின் கருணையை சொல்கிறார். அடியார்கள் பக்தியையும் விஞ்சிடும் அருள் வெள்ளம் அல்லவா அது!

அந்தகன் கலங்க வந்த
கந்தரம் கலந்த சிந்துரம்
சிறந்து வந்தலம்புரிந்த மார்பா

விளக்கம் : உன்னை இதயக்குகையில் வைத்திருக்கும் அடியார்களுக்குத் தன் இதயத்திலும் இடம் தந்து, முக்தி தர வென்று சிந்துர வண்ணத்தினாள் தெய்வானை உன்னுடன் இணைந்து இருக்கும் பொழுது மரணபயம் என்பதும் உண்டோ! அந்த தெய்வ மலர்க் கொடியுடன் சேர்ந்து பக்தரைக் காக்கும் பரமா

அம்புனம் புகுந்த நண்பர்
சம்பு தன் புரநதரன்
தரம் பலும்பர் நம்புதம்பிரானே

விளக்கம் : உனக்காகத் தினைப்புனம் வந்த திரிலோக சஞ்சாரியான இனிய நண்பர் நாரதர், தேவாதி தேவனாம் உன் தந்தை மகாதேவர், தேவராஜன் முதலான தேவர்கள் அனைவரும் மகிழ்ந்து போற்றும் செந்திலின் அரசே சரணம்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே