தமிழில் கந்த புராணம்

புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக, விரிவாக, விளக்கமாக எடுத்துக்கூறுவதே. வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும். அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் கதைகளாக எழுதினார்கள். புராணங்கள் கதை வடிவாக, வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து, யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டன. புரா என்றால் முற்காலத்தில் நடந்தது என பொருள். புராணங்களை வேதத்தின் கண்ணாடி என்று கூறலாம்.

அந்த காலத்தில் பதினெண் புராணங்களும் வடமொழியாகிய சமஸ்கிருதத்தில் இருந்தன. ஞானாசிரியர் குரு தட்சணாமூர்த்திக்கு சனகர், சனாதனர், சனத் குமாரர், சனந்தனர் என நான்கு சிஷ்யர்கள் இருந்தனர் என்றும், மௌனத்தாலேயே குரு அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இப்படி வந்த குரு பரம்பரையில், சிவத்திடமிருந்து பிரிக்க முடியாத அங்கமான நந்தி பெருமான் மறைபொருளாய் இருந்த வேதங்களையும் புராணங்களையும் முறையாக பெற்றார். நந்திதேவேரிடமிருந்து சனத் குமாரரும், அவரிடமிருந்து மகரிஷி வியாசரும் பெற்று, அவற்றை உரிய முறையில் தொகுத்து, மனித சமுதாயத்திற்கு சனாதன தர்மத்தை உருவாக்கினார்கள்.

புராணங்களில் ஒன்றான ஸ்கந்த புராணத்தில் உள்ள சங்கர சங்கிதையின் ஒரு பகுதி தான் ஏழு காண்டங்களை உடைய சிவரகசிய கண்டம். அதிலிருந்து தான் கச்சியப்ப சிவாச்சாரியர் தமிழில் கந்தபுராணம் என்னும் நூலை இயற்றினார்.

கச்சியப்ப சிவாச்சாரியர் காஞ்சிபுரத்தில் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தின் அர்ச்சகரான காளத்தியப்ப சிவாசாரியாரின் குமாரர். வடமொழி, தென்மொழி என இரு மொழிகளிலும் வல்லவராக இருந்த கச்சியப்பரின் கனவில் முருகன் தோன்றி தமிழர்கள் கந்த புராணத்தின் பெருமையை தமிழில் படித்து ஆனந்திக்கும் வண்ணம் இந்தப் புராணத்தை இயற்ற ஆணையிட்டார்.

தன்னால் முடியுமா என்று தயங்கிய கச்சியப்ப சிவாச்சாரியருக்கு கந்த புராணத்தின் முதல் அடியான ‘திகடச் சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்னும் பதங்களை அசரீரியாக முருகப்பெருமானே எடுத்து கொடுத்தார்.

‘திகடச் சக்கரம்’ என்றால், ‘திகழ் தசக்கரம்’ என்று பொருள். அதாவது, திகழ்கின்ற பத்து கரங்களை உடையவன், செம்முகம் ஐந்து உடையவன் என்று விநாயகப் பெருமானைக் குறிப்பிடுகிறது இந்த வரி. அதையே தொடக்கமாகக் கொண்டு கச்சியப்பர் பாடத் தொடங்கினார்.

திகட சக்கரச் செம்முக மைந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர வின்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்

விளக்கம் : திகழ்கின்ற பத்து கரங்களையும் ஐந்து செம்முகங்களையும் உடையவன், சக்ராயுதத்தை உடையவன், தாமரைமேல் வீற்றிருப்பவன், எங்கும் நிறைந்திருப்பவன், விகட சக்கரனாகிய அந்த விநாயகனின் பாதங்களை வணங்குவோம்!

இவ்வாறு தொடங்கி கச்சியப்பர் கந்தனின் வரலாறஂறை இனிய பாடல்களாக எழுதத் தொடங்கினார். நாளும் நூறு நூறு பாடல்கள் எழுதி பரமன் தாளில் பணிவுடன் வைப்பார். மறுநாள் ஓலைச்சுவடிகளின் பாடல்களில் மெருகேற்றும் திருத்தங்கள் சில காணப்படும்.

கச்சியப்பார் சங்கர சம்ஹிதையிலிருந்து முதல் ஆறு காண்டங்களாகிய (உபதேச காண்டம் நீங்கலாக) சம்பவ காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் முதலியவை மட்டும் கந்த புராணத்தில் சேர்த்தார். சிவாச்சாரியார் தான் இயற்றிய 10,345 பாடல்களைை மேல் கூறிய ஆறு காண்டங்களாகப் பிரித்தார்.

நூலை இயற்றி முடித்தபின் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரங்கேற்றத்தின்போது, இறைவனை வணங்கி ‘திகட சக்கரம்’ என்ற அந்தப் பாடலை அவர் வாசித்ததும், ஒரு புலவர் 'திகட சக்கரம் எனல் என்ன?’ என்று கேட்டார். ‘திகழ் தசக்கரம் என்று பொருள்,’ என்றார் கச்சியப்பர். 'ழகரமும் தகரமும் சேரும் போது டகரமாக மாறும் சந்தி இலக்கண முறை தொல்காப்பியத்தில் அல்லது பின் வந்த இலக்கண நூல்களில் இல்லை என்று புலவர்கள் வாதித்தனர். ஆகவே, கந்தபுராண அரங்கேற்றம் அப்படியே நின்றது.

அன்று இரவு, அவர் கனவில் மீண்டும் முருகன் வந்தான். ‘நாளை அந்தப் புலவரின் சந்தேகம் சரியான முறையில் தீர்க்கப்படும்‘ என்றான். மறுநாள், அரங்கேற்றம் தொடரவேண்டிய நேரம். புலவர் ஒருவர் சபையில் கையில் வீரசோழியம் என்ற நூலுடன் நுழைந்து அந்த நூலின் சந்திப் படலத்தில் பதினெட்டாவது செய்யுளில் “திகடசக்கரம்“ என்று தொடரும் இலக்கண விதி இருக்கிறது என்று எடுத்துரைத்தார். திகழ் + தசக்கரம் = திகட சக்கரம் என்பதற்கான இலக்கணம் அங்கே குறிப்பிடப்பட்டிருந்தது. திருப்தி அடைநஂத புலவர்கள் திரும்பி பார்த்தால், வந்தப் புலவரைக் காணவில்லை. அவையினர் இலக்கணப் பிழை உள்ளதாகச் சொன்னவர்களின் சந்தேகத்தைத் தீர்க்க கச்சியப்பரின் காவியத்துக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்த முருகனே நேரில் வந்தது புரிந்து மெய் சிலிர்த்து போனார்கள். இதற்குப் பிறகு நூல் சிறப்பாக அரங்கேறியது. அரங்கேற்றி முடிக்க ஓர் ஆண்டு ஆனது. குமரகோட்டத்துப் பிரபுக்கள் கச்சியப்ப சிவாசாரியாரைக் கந்தபுராண நூலோடு பல்லக்கில் ஏற்றி சிறப்பித்தனர்.

கந்த புராணம்: பகுதி 1 A

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே