கந்த புராணம் : பகுதி 8 B

கந்தபுராணம் : பகுதி 6 Aகந்தபுராணம் : பகுதி 6 B
கந்த புராணம் : பகுதி 7 Aகந்த புராணம் 7B
கந்த புராணம் பகுதி 8 A

முருகன் கிரவுஞ்ச மலைக்கு வருகை

சிதறி ஓடிய படையைக் கண்ட நாரதர் உடனடியாக முருகப்பெருமானைத் தஞ்சமடைந்தார். 'முருகா, நீ இருந்தும் இப்படி நடக்கலாமா தாரகன் உன் தம்பி வீரபாகு வீரகேசரி ஆகியோரை கிரவுஞ்சனிடம் ஒப்படைத்து விட்டான். இப்போது அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை. உன்னையே எந்நாளும் வணங்கும் உன் தொண்டர்களைக் கைவிடலாமா?' என்றார். முருகன் ஆவேசத்துடன் வாயுவை தேரோட்ட அழைத்து கிரவுஞ்ச மலைக்கு சென்றார். கிரவுஞ்சமலை அடிவாரத்தில் அசுரப்படைகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன. ஒளிந்திருந்த தேவர் படை முருகனின் தேரைக் கண்டதும் ஆரவாரம் செய்து வெளிப்பட்டனர். தாரகன் ஒழிந்தான் என கூச்சலிட்டனர். தேவர் திடீரென வெளிப்பட்டதையும் சூரியனையும் மிஞ்சும் ஒளியையும் இதுவரை கண்டிராத சுந்தர வதனமும் கொண்ட இளைஞன் ஒருவன் தேரில் ஒய்யாரமாக அமர்ந்திருப்பதை தாரகனும் கவனித்தான்.

முருகனை கண்டு மெய்மறந்த தாரகன்

அந்த இளைஞனைப் பார்த்ததும் அவன் மனதில் தானாகவே ஒரு மரியாதையும், அருகில் சென்று அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. தூதனிடமிருந்து அவன் சிவனது நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய விருத்தாந்தத்தை அறிந்தான். உடனே தனது தேரை முருகனின் தேர் அருகில் கொண்டு நிறுத்தும் படி சாரதிக்கு உத்தரவிட்டான். முருகனைக் கண்கொட்டாமல் பார்த்தான். ஆறு முகங்கள் 12 கரங்கள் அனைத்திலும் ஒளிரும் ஆயுதங்கள் கமலம் போல் முகம் இத்தனையும் தாரகனைக் கவர்ந்தன. மெய்மறந்து அப்படியே நின்றான்.

தாரகன்-முருகன் யுத்தம்

வடிவேலனைப் பார்த்து அதிசயித்து மெய்மறந்த தாரகன் அவரிடம் 'முருகா, எங்கள் அசுர வம்சத்திற்கும் தேவ வம்சத்திற்கும் காலம் காலமாக தீராப்பகை இருந்து வருகிறது. அதை நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். உன் தந்தை பரமேஸ்வரனே எனக்கும் என் சகோதரர்களுக்கும் சகல சக்தியையும் அருளியிருக்கிறார். அவ்வகையில் உன்னையும் அவரைப் போலவே வழிபட காத்திருக்கிறேன். அதனால் எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே!' என்றான் பணிவான வார்த்தைகளால்.

வடிவேலன் சிரித்தான். 'தாரகா, உலகத்தை சிருஷ்டிக்கும் பரமசிவனாரின் கருணையே உன்னை அழிக்க வேண்டும் என்பது தான். ஏனெனில் பரமசிவானார் உனக்கு வரமளிக்கும் போது என்ன சொன்னாரோ அதை மீறி விட்டாய். இறைவன் வரம் தருவது உலகத்திற்கு நன்மை செய்வதற்காக நீயோ உலகத்தையே அழித்துக் கொண்டிருக்கிறாய். பிறரை மதிக்காதவனுக்கும் கொடுமைப்படுத்துபவனுக்கும் இறைவன் கொடுத்த வரங்கள் பலிப்பதில்லை. சிவனார் இட்ட கட்டளைப்படி உன்னை ஒழிக்கவே வந்திருக்கிறேன்' என்றார் கம்பீரமான குரலில்.

தாரகனுக்கு பொறுமை போய் அசுரகுணம் தலைக்கேறி விட்டது. 'சிறுவனே! நான் விஷ்ணுவையும் பிரம்மனையும் இந்திரனையும் வென்றவன். விஷ்ணு அவரது சக்கரத்தை என் மீது ஏவிய போது அது என் நெஞ்சில் பட்டு பதக்கமாக ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார். என் முன் நிற்கும் தகுதி கூட உனக்கு இல்லை. ஓடிப் போய் தாய் தந்தையுடன் சுகமாக இரு,' என்றான் ஆணவத்துடன்.

'அகம்பாவம் பிடித்தவனே! தன் சுயபலத்தை தம்பட்டம் அடிக்காமல் வா போருக்கு!' என்று அறைகூவல் விடுத்தார் முருகன்.

பொறுமையிழந்த தாரகன் முருகனின் மீது அம்பு மழை பொழிய அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார் கந்தப்பெருமான். அதிபயங்கர யுத்தம் நடந்தது. எல்லா அஸ்திரங்களையும் அடித்து நொறுக்கி தாரகனின் தும்பிக்கையை துண்டு துண்டாக்கினார் வடிவேலன். அது மீண்டும் முளைத்தது. பல மாயங்கள் செய்து மீண்டும் மீண்டும் பிழைத்த அவன் ஒரு கட்டத்தில் கிரவுஞ்ச மலைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். கந்தன் கிரவுஞ்ச மலை மீது தன் வேலை எறிந்தார். அதன் சக்தி தாளாமல் மலையாய் நின்ற கிரவுஞ்சன் என்ற அந்த அசுரன் தன் உயிரை விட்டான். உயிரற்று சாய்ந்த மலையை வேலால் கிழித்த வேலவன் உள்ளிருந்த வீரபாகு மற்றும் வீரர்களை மீட்டார். அதனுள் சிக்கியிருந்த நவவீரர்களும் போர் வீரர்களும் வெளிப்பட்டுப் புத்துணர்ச்சி பெற்றனர். அவர்கள் ஆரவாரத்துடன் வெளியே வந்தனர்.

திரிபுர தகனம்

மறைந்திருந்த தாரகன் வித்யுன்மாலி, தாரகாக்ஷன், கமலாக்ஷன் என்ற பெயர்களில் மூன்று வடிவங்களை எடுத்தான். மூன்று நகரங்களை அமைத்து அதில் ஒளிந்து கொண்டான். முருகப்பெருமான் பரமசிவனார் போல் உருமாறி அந்த நகரங்களை எரித்தே அழித்தார். (குறிப்பிட்ட நேரம் வந்த போது, முப்புரங்கள் யாவும் ஒரே இடத்தில் ஒன்று கூடின. கையில் அம்பின் முனையைப் பிடித்தவாறு சிவபிரான், தன் முக்கண்ணால் முப்புரங்களையும் பார்த்துச் சிரித்து விழிக்க, அவை உடனே சாம்பலாயின. அசுரர்கள் முன்பு சிவபிரானை வழிபட்டதால், அவர்கள் மடியாமல், சிவபிரானின் கருணையினால் சிவ கணங்களாக மாறினர். ஒன்றும் நேராத திரிபுர சகோதரர்களும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி, சிவபெருமானை தஞ்சம் புகுந்ததால், அவர்கள் சிவபிரானின் துவார பாலகர்களாயினர்.

அங்கிருந்து தப்பிய தாரகனை வேலெறிந்து வீழ்த்தினார். சற்றும் எதிர்பாராத விதமாக தாரகன் போர்களத்தில் வீழ்ந்து மாண்டான். வானவர்கள் மலர் மாரி பொழிந்தனர். தாரகனின் படை சிதறியது. அவர்களை வீரபாகு தலைமையிலான தேவர் படை துவம்சம் செய்தது. போர்களத்தில் ஒரு அசுர உயிர் கூட மிஞ்சவில்லை.

தாரகாசுரன் மாயா மலம். அவனுக்குத் துணை செய்த கிரௌஞ்ச மலை அவித்தை. கிரௌஞ்சம் என்பது ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் ஆகிய வினைத் தொகுதிகள். அவற்றை வேல் அழித்தது. இது தான் தாத்பர்யம்.

தாரகன் மடிந்தான் என்ற செய்தியறிந்து அவனது மனைவி கவுரியும் மற்ற ஆசைநாயகியரும் ஓடோடி வந்து கதறினர். தன் தந்தை இறந்த செய்தியறிந்து தாரகனின் மகன் அசுரேந்திரனும் ஓடிவந்தான். தந்தையின் உடலின் மீது விழுந்து கதறினான். 'அப்பா! உங்களுக்கு நேர்ந்த இழுக்கிற்கு பிராயச்சித்தம் செய்வேன் எந்த சிறுவன் உங்களைத் தோற்கடித்தானோ, அந்த சிறுவனுக்கு பாடம் புகட்டுவேன்' என்று சபதம் செய்தான். பின்னர் அகில் சந்தனக்கட்டைகளை அடுக்கி அதன் மீது தந்தையின் உடலை வைத்து சகல மரியாதைகளுடன் தகனம் செய்யச் சென்றான். அவனது தாய்மார்கள் தங்களையும் சிதையில் வைத்தும் தகனம் செய்யும்படி அடம்பிடிக்கவே. அவர்களையும் சிதையில் அமர வைத்து தீமூட்டினான். இறுதிக் கிரியைகளை முடித்த பின் கோபமும் வருத்தமும் பொங்க தன் பெரியப்பா சூரபத்மனின் நகரான வீரமகேந்திர பட்டணத்தை வந்தடைந்தான்.

கந்த புராணம் : பகுதி 9

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே